இந்த தொடரின் முடிவில் வந்து நிற்கின்றோம். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வழியா இல்லை பூமியில்? என்பதையும் யோசிக்கத்தானே வேண்டும்.
தற்போதைய தமிழக முதல்வர் அடுத்த வருடம் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்துள்ளார். ஆனால் நிதர்சனமான உண்மைகள் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு அன்றைய பேச்சு அன்றோடு போச்சு. ஆனால் பாதிக்கப்படும் மக்களுக்கு?
நாம் இதுவரையிலும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழக மக்களுக்கு எந்த காலத்திலும் பிரயோஜனமில்லை என்பதையும் பார்த்து விட்டோம். ஆனாலும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றது. காரணம் காசு இல்லாவிட்டால் கட்சி நடத்த முடியாது என்பது கட்சி விசுவாசிகள் சொல்லும் காரணமாகும்.
26.3.2012 அன்று சமர்பிக்கபட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு 3,800 மெகாவாட்டுக்கான மின் திட்டங்களை அறிவித்துள்ளது. அது உடன்குடி 800 மெகாவாட். உப்பார் திட்டம் எண்ணூர் 1600 மாற்றுத் திட்டம், 600 மெகாவாட்,தூத்துக்குடி 4வது கட்டம் 800 மெகாவாட்
ஆக மொத்தம் 3800 மெகாவாட்.
இதற்கும் மேலாக எண்ணூரில் 600 மெகாவாட்டுக்கான ஒரு திட்டத்தையும் எரிவாயுவினை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் 1000 மெகாவாட்டிறக்ன இரு திட்டங்களையும் தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்.
இவற்றால் தமிழகத்தின் மின் பற்றாக்குறையத் தீர்க்க முடியுமா?முதல்வர் சொன்னபடி தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாற்றி விடமுடியுமா?
1991 - 2002 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குள் இந்தியாவிற்குள் மின்சாரத் துறையில் மூதலீடு செய்ய வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் 4.5 சதவிகிதம். அத்தனை பேர்களும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட மகராஷ்டிரா, தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களையே தேர்ந்தெடுத்தனர். இந்த மாநில மின்வாரியங்கள் லாபகரமாக செய்ல்பட்டுக் கொண்டுருந்தன என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புதிய பொருளாதார கொள்கைக்குப் பிறகு மூன்று தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் இந்த துறையில் ஈடுபட அனுமதித்து உள்ளனர்.
முதலாவதாக மாநில மின் வாரியங்களோடு(புரிந்துணர்வு மற்றும் வெளிப்படையான போட்டி என்ற அடிப்படைகளில்) நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள நிறுவனங்கள் அனுமதி அளித்தனர்.
இரண்டாவதாக சுய மின் தேவையை ஈடுசெய்து கொள்வதற்கான சுய மின் உற்பத்தி நிலையங்கள் இங்கே அனுமதிக்ப்பட்டன.
மின்சார வாரியத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தததை செய்து கொள்வதற்காக நிர்ப்பந்தமற்ற அதே நேரத்தில் தனியார் மின் வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான உரிமையைக் கொண்ட வணிக மின்சார உற்பத்தி நிலையங்களும் அனுமதிக்கபட்டன.
ஆனால் அரசாங்கம் விரும்பிய ஆசைப்பட்ட அத்தனை மாற்றங்களும் கடந்த 1991 க்குப் பிறகு மின்துறையில் நடந்தேறி வந்துள்ளன. ஆனால் மக்களுக்கு இறுதியில் கிடைத்தது தான் என்ன?
தமிழகத்தின் இன்றைய மின் தேவை 12,000 மெகாவாட் .ஆனால் 8000 மெகாவாட். தான் உற்பத்தியில் இருக்கின்றது.
2007 ஆம் ஆண்டில் தொடங்கிய மின் வாரியத்தின் சுய உற்பத்தி மற்றும் நெய்வேலி என் எல் சி & என் டி பி சி யின் கூட்டு முயற்சி மின் நிலையங்கள் 2012 ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2013 தொடக்கத்திலேயோ தம் உற்பத்தியைத் தொடங்கி விடும். .தோராயமாக 2013 கோடைக காலத்தில் சுமார் 3300 மெகாவாட் மின்சாரம் அதிகமாகக் கிடைக்க வாய்பிருக்கிறது.
திருவள்ளுர் என்சிபிசி மற்றும் தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து 1500 மெகாவாட். இதில் த நா மினவாரியத்தின் பங்கு 1041 மெகாவாட்.
வட சென்னை இரு யூனிட் 1200 மெகாவாட்.
மேட்டுர் 600 மெகாவாட்.
நெய்வேலி என் எல் சி உடன் த நா மின்வாரியமும் இணைந்து 1000 மெகாவாட் இதில் மின்வாரியத்திற்கு பங்கு 367 மெகாவாட்.
சிம்மத்ரி 3 வது யூனிட் 95 மெகாவாட்
ஆக மொத்ம் 3323 மெகாவட்.
அணுமின் நிலையங்களில் இருந்து 1100 மெகாவாட் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும் கல்பாக்கம் மற்றும் கைகா அணு மின் நிலையங்கள் இதுவரை 30 சதத்திற்குக் கீழே தான் உற்பத்தியைக் காட்டியுள்ளன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அணு மின் நிலையங்களில் இருந்து அதிக பட்சமாக 500 மெகாவாட் கிடைக்கும் என்பதே பெரிய எதிர்பார்ப்பு தான். .
2013 ஆம் ஆண்டில் மின் தேவை 7.8 சதம் கூடியிருக்கும் என்று வைத்துக் கொண்டால் அதன் கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 13000 மெகாவாட்டாக இருக்கும். அப்பொழுதும் 1200 மெகாவாட் அளவிற்குப் பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கும். தமிழகம் நிச்சயம் மின்வெட்டை சந்திக்க வேண்டிதான் வரும்.
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு 2017 வரை தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க சாத்தியமே இல்லை.
2014 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மின் பற்றாக்குறைய 2200 மெகாவாட்டாகக் கூடிவிடும். புதிய தொழிற்கூடங்கள் நிறுவப்படும் பட்சத்தில் இது மேலும் அதிகரிக்கும். 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஆண்டாதலாலும் தேர்தல்கள் கோடை காலத்தில் நடத்தப்படும் என்பதாலும் இந்தக் கூடுதல் தேவையை ஈடுகட்ட அரசானது சந்தையில் கூடுதல் விலை கொடுத்தே மின்சாரத்தை வாங்கும். இதன் காரணம் மின்வாரியத்தின் நஷ்டம் படு வேகமாகக்கூடிப்போகும்.
2015 ஆம் ஆண்டில் மின் பற்றாக்குறையானது இன்று இப்போது உள்ளதைப் போல 3300 மெகாவாட்டாகக்கூடிப் போகும்.
2014 ஆம் ஆண்டோடு ஜிஎம்ஆர் நிறுவனத்தின் 2,200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக் காலகட்டம் முடிந்து போயிருக்கும். 2016 ஆம் ஆண்டில் 200 மெகாவாட்டுக்கான மதுரை மற்றும் சாம்பல்பட்டி மின் நிலையங்களின் உற்பத்தி முடிந்து போகும்.
இந்த சூழ்நிலையில் 15 ஆண்டுகள் கடந்து விட்ட திரும்பகோட்டை (107 மெகாவாட்) இருமுறை பழுதுபட்ட குத்தாலம் (101 மெகாவாட்) மின் நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது.
உருவாக்கப்படும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எப்படி உதவும் என்று சொல்ல முடியாது. புதிய மின் உற்பத்தி நிலையங்கள் வர வாய்பில்லாத சூழ்நிலையில் தமிழகத்தின் மின் தேவை 4500 மெகாவாட்டைத் தாண்டியிருக்கும்.
எனவே மின்வாரியத்தைக் காப்பாற்வே முடியாத சூழ்நிலை 2016-17 ஆம் ஆண்டில் நிகழலாம்.
இதனை தடுக்க வழிகள் உண்டா?
2003 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மின்சார சட்டத்தினால் உருவாக்கப்படட தனியார் மின நிறுவனங்கள் (ஏறக்கறைய பத்து நிறுவனங்கள்) தமிழ்நாடு முழுக்க பிரம்மாண்டமாக வளர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்த பத்து நிறுவனங்களும் உற்பத்தி செய்யப்போகும் 18140 மெகாவாட் ஆகும். இவர்கள் தயாரிக்கப் போகும் மின்சாரம் எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு அல்ல. அது வியாபாரத்திற்கு. மேற்கொண்டு நமக்கு அவசியம் தேவைப்படால் அவர்கள் சொல்லும் விலைக்கு நாம் கட்டுப்பாட்டால் வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒரு நிறுவனம் தான் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் உள்ள சி. பிரதாப் ரெட்டி அவர்களுடையது. ஏறக்குறைய 2000 மெகாவாட் அளவுள்ள தமிழ்நாட்டில் மரக்காணத்தில் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிறுவனங்களின் பட்டியல்
COASTAL ENERGEN PVT LTD | 1200 MW | TUTICORIN |
TRIDEM PORT POWER LTD | 2000 MW | NAGAPATTINAM |
UDI INFRASTRUCTURE PVT LTD | 2000 MW | CUDDALORE |
SRI CITY INFRASTRECTURE DEVELOPMENT LTD | 1000 MW | MANAPPADU |
IND BARATH POWER MADRAS PVT LTD | 1320 MW | TUTICORIN |
PEL POWER PVT LTD (PATEL ENGG. LTD) | 1050 MW | NAGAPATTINAM |
NSL NAGAPPATTINAM & INFRATECH PVT LTD | 1500 MW | NAGAPATTINAM |
IL AND FS TAMIL NADU POWER CO LTD | 3600 MW | CUDDALORE |
APPOLLO INTRASTRUCTURE PROJECTS FINANCE CO PVT LTD | 2000 MW | MARAGGANAM |
SRM ENERGY PVT LTD | 2000 MW | CUDDALORE |
TOTAL | 18140 MW | |
சரி, இவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. மீதி இருக்கும் வாய்ப்புகள் தான் என்ன?
1. ஆந்திராவில் உள்ள சிம்மத்திரி முதல் நிலையத்தின உற்பத்தித் திறனான 1000 மெகாவட்டில் தமிழகத்திற்கு சட்டபடி கிடைக்க வேண்டிய ஆனால் இதுவரையிலும் கொடுக்கப்டடாத பங்கு 190 மெகாவாட் ஆகும். தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரண்டாவது நிலையத் திறன் கூட இன்று வரையிலும் ஆந்திரத்திற்கே வழப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார்.
2. நெய்வேலி முதல் நிலையத்தின் உற்பத்தித் திறன் 600 மெகாவாட் ஆகும்.1962ல்நிறுவப்பட்டது. இந்த 600 மெகாவாட்டும் தமிழகத்திற்குத்தான் என்ற ஒப்பந்தம் இருக்கிறது. இது புதுப்பிக்கப்படும் போது அதன் திறன் 1000 மெகாவாட்டாகும். இந்த 1000மெகாவாட்டையும் தமிழகத்திற்கு பெற முடியும் .
3 தூத்துக்குடியில் அமையவிருக்கும் என்எல்சி மினவாரியக் கூட்டு மின் நிலைய ஒப்பந்தப்படி உள்ள 387 மெகாவாட்டுக்குப் பதிலாக 750 மெகா வாட்டைப் பெற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. இந்தியாவின் கிழக்கு மேறகுப் பிராந்தியங்களில் இருந்து கிடைக்கும், குறைந்த விலை மின்சாரத்தைத் தமிழகத்திற்கு கொண்டு இன்று போதுமான மின் பாதைகள் இல்லை. இதை அமைக்க ஏற்பாடு செய்யதாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
5. தொடக்கம் முதலே தனியாருக்கு மட்டுமே சாதகமான ஒழுங்குமுறை ஆணையத்தை கலைக்கப்படாதவரைக்கும் மின்சாரச் சட்டத்தை நீக்க முயற்சி எடுக்காத வரையிலும் எந்த மாறுதல்களும் நடை பெறப் போவதில்லை.
2016-2017 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது இல்லாமல் போயிருக்கும். தனியார் மூலம் மட்டும் மின்சாரத்தை பார்க்க முடியும்.
கூட்டு முதலீட்டுத் திட்டங்களான நெய்வேலி அனல் மின் நிலையம் தமிழ்நாடு மின்வாரியம் தேசிய அனல் மின் கார்ப்ரேஷன் தமிழ்நாடு மின் வாரிய திருவள்ளுர திட்டம் ஆகியவை 2002-2003 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டன என்றாலும் கூட இவை இந்த பத்தாண்டுக்குப் பிறகே செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றது.
ரூ 10,000 கோடி முதலீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் (டிட்கோ) இணைந்து திரவ இயற்கை எரிவாயு முனையம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தையை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தமிழ்நாடு அரசுடன் 24 மே 2010 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்க்கும், தமிழ்நாடு தொழில் வளர்சசிக் கழகத்துக்கும் இடையே ஆகஸ்டு 2010 ல் கையெழுத்தானது.
இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் இது தான் முதல் மறு வாயுவாக்கம் முனையமாகும். இந்த முனையமானது ஆண்டொன்றுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயுவைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும். இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்த ஒப்பந்தம் 22 மார்ச் 2012 ல் கையெழுத்தானது.
2015-16 ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் திட்டம் செயல்படத் துவங்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. இந்த திட்டத்திற்குத் தேவையான திரவ இயற்கை எரிவாயுவினை நீணட் கால அடிப்படையில் வாங்குவதற்காக கட்டார், பிரிட்டிஷ்,கேஸ் மற்றும் ரஷ்ய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.
இந்த தொடர் முடிவடையும் இந்த நேரத்தில் நீங்கள் இந்த வலைதளத்தை ஒரு முறை விரும்பியவர்கள் பார்த்து விடவும்.
இந்த வலைதளத்தில் உள்ள நிறுவனத்தை துபாய் நாட்டில் உள்ள அஹமது புகாரி நிறுவி உள்ளார். நிலக்கரி வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர். .டாட்டா குழுமம் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து நிலக்கரி விநியோகம் செய்வது அவரது முதன்மையான தொழில். இவரின் நிறுவனம் தூத்துக்குடியில் 1200 மெகாவாட் நிலக்கரி மின் மையம் மின் உற்பத்தியைத் துவங்கும் நிலையை அடைந்துள்ளது. மேலும் அங்கேயே 1600 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி மையத்தை நிறுவ முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த மின் நிலையம் டாட்டா பவர் டிரேடிங் நிறுவனத்துடன் அதன் 70 சதவிகித மின்சாரத்தினை மின கொள்முதல் ஒப்பந்தத்தை செய்துள்ளது. மீதமுள்ள 30 சதவிதிக மின்சாரத்தை என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்ட போது
அவர் சொன்ன பதில்
"இந்த மின்சாரத்தை எவருக்கு வேண்டுமானாலும் விற்கு கொள்ளலாம் என்பதற்கான உரிமையை 2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டம் எங்களுக்கு வழங்கி உள்ளது. இலங்கை வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளில் உள்ள எவருக்கும் இந்த மினச்ரத்தை நாங்கள் விற்றுக் கொள்ளலாம் எனப்தை சட்டம் உறுதிபபடுத்தி உள்ளது. யார் நல்ல விலை கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விற்போம்" என்றார்.
நம்முடைய சட்டங்கள் என்பது சாமானிய மக்களுக்காகவா? என்பது தற்போது உங்களுக்கு புரிந்து இருக்குமோ? .
ஸ்வீட் எடுங்க. கொண்டாடுங்க. புதிய திரைப்படங்களுக்குச் செல்வோம். விமர்சனம் எழுதுவோம். மீதி நேரம் இருந்தால் சிரிப்பொலி, ஆதித்யா சேனல் பார்க்கலாம். நாளைய பொழுதில் என்ன மாறுதல்கள் வேண்டுமானாலும் நடக்கக்கூடும். கவலைப்பட்டு என்ன ஆகப் போகின்றது?.
நாம் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் சென்னையைத் தவிர்த்து மற்ற இடங்களில் அறிவிக்கப்படாமல் 16 மணி நேரம் மின்தடை அமலில் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களும், நாடு இழந்த தொகையும் கணக்கில் அடங்கா. இன்று வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. காசு இருந்தால் கவலையில்லை என்று யோசிக்கும் நடுத்தரவர்க்கத்தினர் தற்போது பயன்படுத்திக் கொண்டு இருக்கும் இன்வெர்ட்டர், யூபிஎஸ்க்கு கூட சார்ஜ் ஏற்ற முடியாத அளவுக்கு உருவாகப் போகும் மின்தடையில் வாழப் போகின்ற நம் வாழ்க்கை நம்மை பார்த்தே சிரிக்கும் காலம் வரப்போகின்றது.
அரசியல்வாதிகளின் கொள்ளையை விட நமக்கு அரசியல்கட்சி விசுவாசம் தான் பிரதானமானது. வாழ்க்கைக்குத் தேவையான பிரச்சனைகளை விட தற்போது சாதிப் பிரச்சனைகள் தான் முக்கியமானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று பாதுகாப்பாக வாழப் பழகி விட்ட சமூகத்திற்கு அஹிம்சை எண்ணமே நமக்கு முக்கியமானது.
காந்தி சொன்ன கிராமிய பொருளாதாரத்தைப் பார்த்து கைகொட்டி சிரித்த அத்தனை பேர்களுக்கும் இனி வரும் காலங்களில் அவர் வாழச் சொன்ன வாழ்க்கை தான் சரி என்று உணரும் நேரமாகவும் இருக்கப் போகின்றது. நுகர்வு கலாச்சாரம் என்ற நுகத்தடியில் நாமே நம்மை விரும்பி மாட்டிக் கொண்டுள்ளோம். உணர்ந்துள்ள அரசியல்வாதிகளும் கனவு காணுங்கள் என்று தானே சொல்லி நம் ஆசையை அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பன்னாட்டு, பெரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இனி நம் வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ள வேண்டும். .
பத்தாண்டுகளுக்கு முன்னால் சூரிய சக்தியை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்று அரசாங்கங்கள் முன்னெடுத்து இருந்தால்? இன்று இந்த அளவுக்கு பிரச்சனைகள் உருவாகியிருக்குமா?
அப்புறம் எப்படி அவர்களால் சம்பாரித்து இருக்க முடியும்?
வெகுஜன பத்திரிக்கைகளில் கூட இத்தனை விஸ்தாரமாக எழுத முடியாது. அவர்களின் நிர்ப்பந்தங்கள் என்பது தனியாக பேசவேண்டிய சமாச்சாரம். பணத்தை சம்பாரிப்பதை விட சம்பாரித்த பணத்தை காப்பாற்று தான் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சனை.. பணம் படைத்தவர்களுக்கு காப்பாற்றியே ஆக வேண்டிய பயம். மொத்தத்தில் அதுவொரு இருண்ட உலகம்.
அது சரி?
இங்குள்ள வளம் அத்தனையும் சுரண்டியபிறகு அரசியல்வாதிகளும் நாமும் எதை வைத்து நாம் நுகரப் போகின்றோம்?
தொடர் இத்துடன் முடிவடைகின்றது.
...
இந்த தொடர் பதிவு எழுத உதவிய புத்தக ஆசிரியர் திரு சா. காந்தி அவர்களுக்கும் உதவி புரிந்த எனது நண்பர்கள் இருவருக்கும் தேவியர் இல்லத்தின் நன்றியை இங்கே எழுதி வைக்க விரும்புகின்றேன்..
தொடரை வாசித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நல் இதயங்களுக்கும் என் நன்றிகள்.
வலைதள வாசிப்பாளர்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகத்தில் இந்த தொடரை ஒவ்வொருவரும் முறை வைத்து படித்துக் கொண்டு இருப்பதாக நண்பர் அழைத்துச் சொன்னபிறகு வலையில் எழுத வேண்டிய விசயங்களுக்கு அப்பாற்பட்டு பல கூடுதல் தகவல்களை எழுதத் தொடங்கினேன்.
நான் நினைத்தபடியே இந்த தொடர் பலரின் பார்வைக்கும் சென்றடைந்தது மகிழ்ச்சியே. இன்னமும் எழுத வேண்டிய விசயங்கள் பல இருந்தாலும் முக்கியமான தகவல்களை ஓரளவுக்கு எழுதியுள்ளேன். தேவையான நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டிய விசயங்களை எழுதியுள்ளேன் என்பதே எனக்கு திருப்தியாக உள்ளது. என்னை உழைக்க வைத்த நண்பர் வவ்வாலுக்கு நன்றி.
இந்த பதிவில் உங்கள் விமர்சனங்களை எழுதி வைத்தால் அது பலரின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடும். நிச்சயம் இதில் நீங்கள் எழுதி வைக்கும் விமர்சனத்திறகெல்லாம் கைது நடவடிக்கை ஏதும் இருக்காது என்பதை கூடுதல் தகவலாக விட்டுச் செல்கின்றேன்